Saturday, July 13, 2013




ஒலியெல்லாம்
மொழியாமோ


ஒலியெல்லாம் மொழியல்ல
ஒலியளந்தால் மொழியாகும்
ஒலியசைந்தால் எழுத்தாகும்
ஒலியிசைந்தால் சொல்லாகும்!           1

எழுத்தெல்லாம் சொல்விரிக்கும்
சொல்லெல்லாம் பொருள்குறிக்கும்
எழுத்தோடு சொல்லெல்லாம்
பொருள்குறித்துக் கருத்துணர்த்தும்!       2

தமிழ்ச்சொல்லே தமிழ்காட்டும்
தமிழ்ச்சொல்லே தமிழாக்கம்
தமிழ்ச்சொல்லைக் கைவிட்டால்
தமிழில்லை பிறிதாகும்!                 3

தமிழ்ச்சொல்லைக் காப்பதுதான்
தமிழ்தமிழர் காப்பாமே!
தமிழெழுத்தால் தமிழ்ச்சொல்லால்
தமிழ்ப்பொருளைக் காப்போமே!          4

தலைமுறைக்குத் தலைமுறையே
தமிழ்கொடுத்துத் தமிழாக்கும்!
தலைமுறைக்குத் தலைமுறையே
      தமிழ்படித்துத் தமிழாவாய்!               5




No comments:

Post a Comment